வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் போதும் : இறப்பு அபாயம் கணிசமாகக் குறையும்...

 மிதமான அளவில் செய்யப்படும் உடற்பயிற்சிகள் மற்றும் உடல் செயல்பாடுகள் கூட, பல காரணங்களால் ஏற்படும் மரண ஆபத்துகளை வெகுவாக குறைக்கிறது.


தற்போதைய மெஷின் வாழ்க்கையில் மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறைகள் காரணமாக ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ளும் பலரும், பாதிக்கப்பட்ட ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறிது அலட்சியமாகவே செயல்படுகின்றனர்.

இதை மிக எளிதாக கண்டறிய வாரத்திற்கு நாம் அனைவரும் உடற்பயிற்சிக்கென்று எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம் என்பதை கணக்கிட்டாலே போதும். இந்நிலையில் மிகப்பெரிய விரிவான ஆய்வு ஒன்றில், வாரத்திற்கு சராசரியாக 150 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் செய்யும் பழக்கம் இறப்பு அபாயத்தை பெரிய அளவில் குறைக்க உதவுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த முடிவு சுமார் 30 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இதில் சுமார் 1,16,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் ஆய்வின் முடிவுக்கு வலு சேர்க்கிறது. ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்களது உடல் செயல்பாடு பற்றிய விரிவான சுய அறிக்கைகளுடன் ஒரு கேள்வித்தாளுக்கு பதிலளிக்க கேட்கப்பட்டது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனுக்காக லிப்பின்காட் வில்லியம்ஸ் & வில்கின்ஸ் வெளியிட்ட அறிவியல் இதழில் இந்த ஆய்வின் முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது.


ஆய்வில் கண்டறியப்பட்டது என்ன..?

மிதமான அளவில் செய்யப்படும் உடற்பயிற்சிகள் மற்றும் உடல் செயல்பாடுகள் கூட, பல காரணங்களால் ஏற்படும் மரண ஆபத்துகளை வெகுவாக குறைக்கிறது. ஆய்வில் பங்கேற்றவர்கள் அளித்துள்ள பதில்களின் அடிப்படையில் 150 - 599 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களின் இறப்பு அபாயம் வெகுவாக குறைந்துள்ளது என்று குறிப்பிட்டு உள்ளனர் ஆய்வாளர்கள். இதில் வாரத்திற்கு 150-299 நிமிடங்கள் அல்லது 300-599 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு முறையே இறப்பு அபாயம் 2% முதல் 4% மற்றும் 3% முதல் 13% கூடுதலாக குறையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உடல் செயல்பாடுகளுக்கான நிபுணர்களின் பரிந்துரைகளை பின்பற்றுபவர்கள் எந்தவொரு காரணத்தினாலும் இறக்கும் அபாயத்தை 21% வரை குறைப்பதாக மற்றொரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இதனிடைய உடல் செயல்பாடுகளை அடுத்து உடற்பயிற்சி என்று வரும் போது இறப்பு அபாய விகிதம் இன்னும் கணிசமாக குறையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதே நேரம் நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 2 முதல் 4 மடங்கு வரை உடற்பயிற்சி செய்தவர்கள் தங்கள் இறப்பு அபாயத்தை 31% வரை குறைக்க கூடும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் குறிப்பிட்டுள்ளது.


இதய நோய்களால் இறப்பு வீதம் அதிகம்.!

சர்வதேச அளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கும் இதய நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் 18 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். இந்த இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு 70 வயதுக்குட்பட்டவர்களில் முன்கூட்டியே ஏற்படுகிறது. WHO அமைப்பு தனது சமீபத்திய அறிக்கையில், தொற்றாத நோய்களில் உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாக இதய நோய்கள் முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதய ஆரோக்கியத்தில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம்

குறைவான உடல் செயல்பாடுகளுடன் ஒப்பிடும் போது அதிக உடல் செயல்பாடு இதய நோய்களை ஏற்படுத்தும் குறைந்த அபாயத்துடன் தொடர்புடையது என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. முற்றிலும் உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பவர்கள், உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் திடீரென்று அதிக உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் கடுமையான கார்டியோவாஸ்குலர் அபாயங்களுடன் தொடர்புடையவர்கள். எனவே படிப்படியாக உடல்செயல்பாடுகள் அல்லது உடற்பயிற்சிகளை அதிகரிப்பதன் மூலம் அபாயங்களை குறைக்கலாம். வாக்கிங், கோல்ஃப் விளையாடுதல், சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் பயிற்சி மற்றும் மலை ஏறுதல் போன்ற பல்வேறு உடல் செயல்பாடுகளில் ஒருவர் ஈடுபடலாம்.


இதய நோய்களுக்கான ஆபத்து காரணிகள்..

அதிக புகையிலை பயன்பாடு, மது பழக்கம், அதிக உப்பு நுகர்வு, பழம் மற்றும் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது, உடல் உழைப்பே இல்லாமல் இருப்பது இதய நோய்களுக்கான ஆபத்து காரணிகளாக இருக்கின்றன. தவிர ரத்த அழுத்தம், அதிக ரத்த குளுக்கோஸ், அதிக எடை மற்றும் உடல் பருமன், சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால் உள்ளிட்டவையும் இதய நோய்கள் ஏற்பட முக்கிய பங்கு வகிக்கின்றன.

பொதுவாக இதய நோய்களுடன் தொடர்புடைய அறிகுறிகள் கவனிக்க முடியாத அளவுக்கு நுட்பமானவை என்பதால்ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் போது மட்டுமே ஒருவருக்கு பாதிப்பு இருப்பதை கண்டறிய முடியும். எனவே மேற்காணும் ஆபத்து காரணிகள் பற்றி ஒருவர் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். உடல் செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சிகள் தவிர சரியான அளவு ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவுகளை டயட்டில் சேர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.




Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....